சனி, 14 மார்ச், 2015

அழகை அதிகரிக்க தினமும் இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!

அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் போதாது, அழகாக இருப்பதற்கு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
அதற்கு பகல் நேரத்தில் வெளியே செல்லும் போது மட்டும் போதிய பராமரிப்புக்களை கொடுத்தால் போதாது, இரவிலும் கொடுக்க வேண்டும். அப்படி நாள் முழுவதும் அலைந்து திரிந்து இரவில் வீட்டிற்கு வந்த பின் தூங்கும் முன் ஒருசில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் அழகை பாதுகாக்கலாம்

ஏனெனில் பகல் நேரத்தில் தூசிகளாலும், சூரியனின் புறஊதாக்கதிர்களாலும் பாதிப்படைந்த சரும செல்கள் இரவு நேரத்தில் தான் புதுப்பிக்கப்படும். அதற்கு சருமத் துளைகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுவாசிப்பதற்கு ஏற்ற வசதியை உருவாக்கித் தர வேண்டியது அவசியம். இங்கு அப்படி நம் அழகை பாதுகாப்பதற்கும், அதிகரிப்பதற்கும் இரவில் படுக்கும் முன் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், நம் அழகை இயற்கையான வழியில் அதிகரிக்கலாம்.





மேக்கப்பை நீக்கவும்

பகல் நேரத்தில் போட்ட மேக்கப்புகளை இரவில் படுக்கும் முன் தவறாமல் முற்றிலும் துடைத்து நீக்கிவிட வேண்டும். எவ்வளவு அசதியாக இருந்தாலும், மேக்கப்பை நீக்காமல் தூங்காதீர்கள். அப்படி செய்யாவிட்டால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல் சரும செல்கள் அழிந்துவிடும். பின் முகத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே இரவில் படுக்கும் முன் ஃபேஷியல் கிளின்சர் அல்லது மேக்கப் ரிமூவர் பயன்படுத்தி மேக்கப்பை முற்றிலும் நீக்க வேண்டியது அவசியம்.

டோனர் பயன்படுத்தவும்

படுக்கும் முன் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்று, டோனரை சருமத்திற்கு பயன்படுத்துவது தான். டோனரை சருமத்திற்கு இரவில் படுக்கும் முன் பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள இயற்கையான அமிலம் சீராக பராமரிக்கப்பட்டு, எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு தடுக்கும். மேலும் டோனர் பயன்படுத்தினால், சருமத்துளைகளில் தங்கியுள்ள கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டுவிடும். முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இதனை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

கைகளுக்கான க்ரீம்

கைகள் நாள் முழுவதும் மென்மையாக இருப்பதற்கு, கைகளுக்கு போதிய பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். அதற்கு இரவில் எண்ணெய் பசை அதிகம் நிறைந்த மாய்ஸ்சுரைசர் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். இதனால் கைகள், நகங்கள் போன்றவை அழகாக இருப்பதோடு, விரைவில் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.


கண்களுக்கான க்ரீம்

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வானது மட்டுமின்றி, விரைவில் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வந்துவிடும். ஆகவே கண்களுக்கு போதிய பராமரிப்புக்களை கொடுக்க வேண்டியது அவசியம். அதற்கு தினமும் கண்களுக்கான கோல்ட் க்ரீம்களை இரவில் படுக்கும் முன் தடவி வந்தால், கண்களைச் சுற்றி வரும் கருவளையம், கண்களில் வீக்கம், சுருக்கம் போன்றவை வராமல் தடுக்கலாம்.

பாதங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி

பாதங்கள் நன்கு அழகாக பொலிவோடு இருக்க, தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி, கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்தால், குதிகால் வெடிப்பு ஏற்படுவதைத் தடுத்து, பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

கூந்தலை கட்டிக் கொள்ளவும்

இரவில் படுக்கும் போது, கூந்தலை நன்க சீவி மேலே தூக்கி கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் முடியில் சிக்கு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் கூந்தல் முகத்தில் பட்டால், முகத்தில் எண்ணெய் பசை அதிகரித்து, பருக்கள் வர ஆரம்பிக்கும். ஆகவே இரவில் படுக்கும் போது ப்ரீ ஹேர் விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சில்க் தலையணை உறை

படுக்கும் தலையணை, மெத்தை உறை, பெட்சீட் போன்றவை சில்க் துணியாக இருந்தால், அவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் சில்க்கில் புரோட்டீன் இருப்பதால், அவை சருமத்தை இளமையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் தூங்கினால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

அழகான தூக்கம்

நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து, இரவில் சரியாக தூங்காவிட்டால், அது அழகை மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 7-8 மணநேர தூக்கம் மிகவும் அவசியம் என்பதை மனதில் கொண்டு தூங்க வேண்டும். இப்படி தூங்குவதால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் காணப்படும்.

பற்களை துலக்கவும் (பல்ல வெலக்குங்க முதல்ல)

முக்கியமாக உணவு உட்கொண்ட பின்னர் பற்களை தவறாமல் துலக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாயில் உணவுப் பொருட்கள் தங்கி பற்கள் சொத்தையாவது, வாய் துர்நாற்றம் வீசுவது, ஈறுகளில் பிரச்சனை போன்றவை வராமல் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

Comment using facebook

Recommended for you